தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பல இடைத்தரகர்கள் நுழைந்து பல முறைகேடுகள் நடத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இந்த தேர்வு தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இடைத்தரகர்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
சத்துணவு பணியாளர் பணியிடம்:
கடந்த சில மாதங்களுக்கு முன் மதுரை, திருநெல்வேலி, சிவகங்கை, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி போன்ற பல மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சத்துணவு மையங்களில் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் அமைப்பாளர் போன்றவற்றிற்கு 5000க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பணிகளுக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சியே போதுமானது என்றும் கூறப்பட்டிருந்தது.
பணியாளர்கள் நேரடியாக நியமனம் செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததது. சம்பளமும் 3,000 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக 24,000 வரை இருக்கும் என்று கூறப்பட்டது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இன்ஜினியரிங் படித்தவர்கள், பட்டதாரிகள் என்று அனைவரும் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் இன்னும் 7 மாதங்களில் தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த பணியிடங்களை அதற்குள்ளாக நிரப்ப வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. இப்படியான நிலையில் அதிகமானோர் விண்ணப்பித்ததால் இடைத்தரகர்கள் அதிகமாக செயல்பட்டனர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
ஒரு பணியிடத்துக்கு 3 லட்சம் ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் அதிகபட்சமாக 10 லட்சம் வரை கூட வசூலிக்கப்பட்டுள்ளது. இதனால் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் பலரும் இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்துள்ளனர். இப்படியாக இருக்க புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வெள்ளியம்மாள் என்பவர் மதுரை நீதிமன்ற கிளையில் இது குறித்த மனு ஒன்றை அளித்தார்.
நீதிமன்றத்தில் மனு:
அதில், “புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 க்கும் அதிகமான காலிப்பணியிடங்கள் உள்ளன. தற்போது நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இன்னும் நேர்முக தேர்வு நடந்தால் முறைகேடுகள் நடக்க அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இதனால் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பினை ரத்து செய்ய வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கோரியிருந்தார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் தற்போது தமிழக அரசு இந்த பணியிடங்களுக்கான தேர்வினை ரத்து செய்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்னவென்றால் “தமிழகம் முழுவதும் சத்துணவு பணியிடங்களுக்கான தேர்வு பணிகள் நடைபெற உள்ளன. இந்த பணிகளுக்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால் கொரோனா பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிகமானோர் நேர்காணலில் பங்கேற்க உள்ளதால் இந்த பணிகளுக்கான தேர்வு ரத்து செய்யப்படவுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கான தேர்வுகளில் முறைகேடு அதிகமாக நடப்பது குறிப்பிடத்தக்கது.