பிரிட்டானியா பிஸ்கட் தயாரிப்பு நிறுவனம் உட்பட 14 நிறுவனங்கள் தமிழக அரசுடன் கைகோர்க்க முடிவு எடுத்துள்ளதை அடுத்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று அந்த 14 நிறுவனங்களுடன் புரிந்துணவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இந்த மூலமாக தமிழகத்தில் உள்ள 7 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு:
கடந்த மார்ச் மாதம் கொரோனா நோய் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட பொது முடக்கம் காரணமாக பலரும் வேலைவாய்ப்பினை இழந்தனர். அதனால் அவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக, இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரிட்டானியா உட்பட 14 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தொழில் நிறுவனங்கள் இடம் பெயர்ந்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழகத்தில் அரசு சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவில் தொழில்துறை அமைச்சர் சம்பத், தலைமை செயலாளர் சண்முகம் போன்றோர் இருந்தனர். பல நிறுவனங்கள் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசு சார்பில் புதிய தொழில் கொள்கையும் வெளியிடப்பட்டது. இதனால் தமிழகத்தில் பல நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்தன. தற்போது மீண்டும் 14 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க தாமாக முன்வந்துள்ளன.
ரூ.10,000 கோடி மதிப்பிலான முதலீடு:
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக முதலவர் பழனிசாமி முன்னிலையில் இன்று தலைமை செயலகத்தில் கையெழுத்திடப்பட்டன. ரூ.10,000 கோடி மதிப்பிலான முதலீடு தொழில் நிறுவனங்களால் செய்யப்பட உள்ளன. அனைத்து நிறுவனங்களும் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அமைய உள்ளது. அதில்,
- பிரிட்டானியா பிஸ்கெட் கம்பெனி – நெல்லை மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டானில் அமையவுள்ளது.
- ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் தயாரிக்கும் தொழிற்சாலை – ஓசூரில் அமையவுள்ளது.
- அப்போலோ டயர்ஸ் – ஒரகடத்தில் அமையவுள்ளது.
- ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், டி.பி.ஐ. கார்போன் நிறுவனம், மந்த்ரா டேட்டா சென்டர் போன்ற மற்ற நிறுவனங்கள் – திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவுள்ளது.
இந்த நிறுவனங்கள் மூலமாக தமிழகத்தில் உள்ள ஏழாயிரம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது மேலும் 14 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டு உள்ளது.