தமிழகத்தை பொறுத்தவரை இன்று (மே 6) முதல் அடுத்து வரும் 3 நாட்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் ஆகவும் காணப்படும். அதேபோல் இன்று (மே 6) மற்றும் நாளை (மே 7) தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.