தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி இன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்வினை ஒத்திவைப்பது பற்றியும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல்:
கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சம் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது வரை 8 ஆம் கட்டமாக பல தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வருகின்றது. கொரோனா பரவல் அதிகம் உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான சாத்திய கூறுகள் தற்போது இல்லை என்று கூறப்பட்டு வந்தது. அக்டோபர் மாதம் மாணவர்கள் சுயவிருப்பத்தின் பெயரில் பள்ளிகளுக்கு வரலாம் என்று கூறப்பட்டது. ஆனால், அதிகரித்து வரும் கொரோனா பரவல் அச்சம் காரணமாக அந்த அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அனைத்து மாணவர்களும் ஆன்லைன் வாயிலாக தான் பாடங்களை பயின்று வருகின்றனர். தமிழக கல்வித்துறை சார்பில் பாடத்திட்டங்களை குறைத்தல், ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் என்று அனைத்து நடவடிக்கைகளும் மாணவர்களின் உடல் நலன் மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு அமல்படுத்தப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, அரசு பள்ளி மாணவர்கள் இன்னும் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுதவில்லை. இதனால் பொதுத் தேர்வுகளை இன்னும் இரு மாதங்களுக்கு தள்ளிவைக்க கல்வித்துறை சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டின் நிலை இவ்வாறாக உள்ளதால் தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று (அக்டோபர் 06) முதன்மை கல்வி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
அவசர ஆலோசனை கூட்டம்:
இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பு, பொதுத் தேர்வுகளை ஒத்திவைத்தல், பள்ளிகளை திறந்து மாணவர்களின் நலனுக்காக நேரடியாக பாடங்களை நடத்துதல் (இதில் உள்ள நிறை, குறைகள்) தொடர்பாக விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளது. மாலை வரை இந்த கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் சென்னையில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர் செங்கோட்டையன் தலைமை தாங்க உள்ளார். ஆலோசனை கூட்டத்தில் முக்கியமானவர்களாக பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வி கமிஷனர் சிஜி தாமஸ் வைத்யன், இயக்குனர்கள் கண்ணப்பன், பழனிசாமி, நாகராஜ முருகன், கருப்பசாமி, ராமேஸ்வர முருகன், உஷாராணி, குப்புசாமி மற்றும் இணை இயக்குனர்கள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இப்படி அனைவரும் கலந்து கொள்வதால் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.