பொதுவாக புரட்டாசி மாதங்களில் அசைவம் சாப்பிடக் கூடாது என நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்கு விரதம் இருந்து கோவிலுக்கு சென்று வர வேண்டும். இந்த ஆன்மீக காரணங்களில், அறிவியலும் கலந்துள்ளது.
புரட்டாசி மாதம்
நம் முன்னோர்கள் பல ஆன்மீக ரீதியான விரதங்களை கடைபிடித்துள்ளனர். இது அறிவியல் ரீதியாகவும் பல பலன்களை அளிக்கக் கூடியது. ஒரு நாள் முழுவதும் நாம் சாப்பிடாமல் விரதம் இருப்பதால் நமது உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறும். இதேபோல் மாதத்திற்கு ஒரு முறை இருந்து வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
அந்த வகையில் நம் முன்னோர்கள் புரட்டாசியில் விரதம் இருப்பதற்கு அறிவியல் ரீதியாக தொடர்புள்ளது. புரட்டாசியில் தான் நாம் அசைவ உணவுகளை தவிர்த்து கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளோம். புரட்டாசி மாதம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது என குழந்தைகள் கேட்பது வழக்கம். புரட்டாசியில் அசைவத்தை தவிர்ப்பதற்கான காரணம் என்னவென்றால் அந்த மாதத்தில் தான் வெயிலும், காற்றும் குறைந்து மழை பெய்ய ஆரம்பிக்கும்.
இதனால் இதுவரை இருந்த வெயிலின் காரணமாக பூமி சூடாகி இருக்கும். அந்த நேரத்தில் மழை பெய்யும் போது வெயிலினால் ஏற்பட்ட சூட்டை பூமி வெளியில் விட ஆரம்பிக்கும். இம்மாதத்தில் சூடான காலநிலையை காட்டிலும் சூடு மோசமாக இருக்கும். இதனால் நமது உடலில் சூட்டை கிளப்பி விடும். மேலும் அசைவ உணவுகளை சாப்பிட்டால் உடல் சூட்டை மேலும் அதிகரிக்கும். இதனால் வயிறு சமந்தமான நோய்கள், உடல் சூடு, சருமம் உலர்ந்து போகுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
இதனால் தான் நம் முன்னோர்கள் புரட்டாசி முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என கூறியுள்ளனர். மேலும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி தீர்த்தம் அருந்துவதால் உடலில் உள்ள பிரச்சனைகளை தீர்க்கும். எனவே நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த புரட்டாசி மாத விரதத்தை நாமும் கடைபிடித்து உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்.