தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாம் எனவும் பிற மாவட்டங்களுக்கு தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவ நிபுணர் குழு பரிந்துரை வழங்கி உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவர் நிபுணர் குழுவின் பிரதிநிதியான, ஐசிஎம்ஆர் விஞ்ஞானியும் ஆன பிரதீப் கவுர், ஒட்டுமொத்த இந்தியாவில் 70 சதவீத பாதிப்பு 30 சதவீத மாவட்டங்களில் மட்டுமே இருப்பதாக தெரிவித்து உள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
எல்லா நேரங்களிலும் முகக்கவசம் அணிவது, தும்மும் பொழுது மற்றும் இருமும் பொழுது முகத்தை மூடிக்கொள்வதை வழக்கமாக்க வேண்டும் என அவர் தெரிவித்து உள்ளார். கொரோனா பரிசோதனையை அதிகரித்தால் தான் கொரோனா தொற்று பரவலை கண்டறிய முடியும். தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் 77% நோயாளிகள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
எனவே அந்த 4 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கை நீட்டித்து மற்ற மாவட்டங்களில் சில தளர்வுகளை அறிவிக்கலாம் என மருத்துவர் குழு பரிந்துரை வழங்கியுள்ளது. மேலும் சென்னையில் பேருந்துகள், ரயில்கள் என பொதுப்போக்குவரத்தை தொடங்கக்கூடாது மேலும் வழிபாட்டுத் தளங்களை திறக்கக்கூடாது எனவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |