கொரோனாவால் நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே உள்ளனர். இதனால் வாகனங்கள் அதிகமாக வெளியே வராததால் அதன் புகையால் ஏற்படும் மாசு பிரச்சனைகள் கட்டுப்பாட்டில் உள்ளன. மேலும் இந்த கொரோனா புகை பிடிப்போர் வாழ்வில் ‘கேம் சேஞ்சர்’ என்பது போல பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகி உள்ளது.
புகைபிடித்தல்
சிகரெட் புகைப்பது உள்பட புகையிலையை எந்த வகையில் ஒருவர் பயன்படுத்தினாலும் அது அவர்களுக்கு பகை, உயிராபத்தை ஏற்படுத்தும் புற்றுநோய்க்கு வழிவகுத்து விடும் என்றெல்லாம் காலகாலமாக எச்சரிக்கை விட்டுக்கொண்டு தான் இருக்கிறது. அந்த அட்டையில் கூட இதற்கான விழிப்புணர்வு இருந்தபோதிலும் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.
மேலும் மது போதை போல் சிகரெட் பிடிப்பதிலும் பலர் அகப்பட்டுள்ளனர்.தற்போது இந்த கொரோனா புகைபிடித்தலில் பெரிய மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. இந்த கொரோனா பயம் பலர் மனதை மாற்றியுள்ளது என்றே கூறலாம்.
கொரோனா
கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகிறபோது அது மனிதர்களின் நுரையீரலில்தான் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தி விடுகிறது. சுவாசிப்பதில் சிக்கலை உண்டுபண்ணுகிறது. வென்டிலேட்டர் என்னும் செயற்கை சுவாச கருவிகளை பொருத்தி சுவாசிக்க வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதிலும் வென்டிலேட்டர் கருவிகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில் புகைபிடிப்பவர்கள் கொரோனா பாதிக்கப்பட்டால் அதன் விளைவுகள் அதிகம் என உலக சுகாதார மையம் கூறியுள்ளது.
எனவே இந்த கொரோனா வைரஸ் அச்சத்தால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் இங்கிலாந்து நாட்டில் புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட்டதாக தெரிய வந்தது. மேலும், 5½ லட்சம் பேர் புகை பிடிப்பதை விட முயற்சித்துள்ளனர். 24 லட்சம் பேர் தினமும் புகைக்கிற அளவை குறைத்துள்ளனர். இந்த நிலையில் லட்சக்கணக்கானோர் சிகரெட் புகைப்பதை விட்டு விட விரும்புகின்றனர் என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார மேம்பாட்டு இயக்குனர் ருடிகர் கிரெச் கூறுகிறார்.
உலக சுகாதார மேம்பாட்டு இயக்குனர்
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் நெருக்கடிகளுக்கு மத்தியில் லட்சக்கணக்கானோர் புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிட விரும்புவதை இப்போது நாங்கள் பார்க்கிறோம். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கத்தை நிறுத்தும் திட்டங்களில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. புகை பிடிப்பதை கைவிட எங்களுக்கு ஆதரவு காட்டுங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
பல நாடுகளிலும் புகையிலை பொருட்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ‘புகையிலை இல்லை’ பிரிவின் ஒருங்கிணைப்பாளரான விநாயக் பிரசாத் கூறுகிறார். மெக்சிகோ, ஜோர்டான், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இப்படி புகையிலை பொருட்களை கைவிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்காக நாங்கள் புதிய தீர்வுகளை, தொழில்நுட்ப தீர்வுகளை தேடுகிறோம்” என்கிறார் விநாயக் பிரசாத்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் புகை பிடிப்போரும், புகையிலை பொருட்களை பயன்படுத்துவோரும் தங்கள் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்தால் அது அவர்களுக்கும் நல்லது, மற்றவர்களுக்கும் நல்லது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |