நமது தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பரிசு பெற்ற மாணவி ஒருவர் ஆன்லைன் வகுப்புகளில் கொடுக்கப்படும் வீட்டுபாடங்களை செய்ய முடியாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூக்கமின்மையால் மனஉளைச்சல்:
கொரோனா பொது முடக்கம் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகள் தான் நடத்தப்படுகின்றன. அதில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம், தேர்வுகள் என அனைத்தும் கொடுக்கப்படுகின்றன. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் சத்யமூர்த்தி. இவருக்கு மகள் மற்றும் மகன் இருக்கின்றனர்.
இவரது மகள் சுபிக்ஷா மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக ஆன்லைன் வகுப்பு நடைபெற்று வந்துள்ளது. அதில் பங்கேற்ற சுபிக்ஷா வீட்டுப்பாடங்களை முறையாக செய்து வந்துள்ளார்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ஆசிரியர்களும் ஆரம்பத்தில் குறைவாக தான் வீட்டுப்பாடங்களை கொடுத்துள்ளனர். ஆனால், கடந்த சில நாட்களாக அதிகமாக கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சுபிக்ஷா அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை வீட்டுப்பாடங்களை செய்துள்ளார். தூக்கம் குறைந்த காரணத்தால் சில நாட்களாகவே சோர்வாக இருந்துள்ளார், அதே போல் மனஉளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.
நன்றாக படிக்கக்கூடிய மாணவி:
ஒரு கட்டத்தில் அதீதமான மனஉளைச்சலுக்கு ஆளான சுபிக்ஷா தனது வீட்டின் கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். விவரத்தை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது குறித்து சுபிக்ஷாவின் தந்தை சத்யமூர்த்தி கூறுகையில் “என் மகள் நன்றாக படிக்கக்கூடிய மாணவி. அவள் மதுரையில் நடத்த ஒரு விழாவில் சிறந்த பேச்சாளராக கருதப்பட்டு தமிழக முதல்வர் பழனிசாமி கையால் பரிசு பெற்றுள்ளார். அவளது மனஉளைச்சலுக்கான காரணத்தை கண்டுபிடிக்க நான் தவறிவிட்டேன்” என்று சோகத்துடன் தெரிவித்துள்ளார்.