தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை மறுநாள் முதல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடல் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு நிலை:
இன்று காலை தெற்கு வங்க கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருமளவு மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இன்று மற்றும் நாளை தென் தமிழக கடலோர பகுதிகளில் வறண்ட வானிலையே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நாளை (23/11/2020) தென் தமிழக கடலோர பகுதிகள், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை & மழைப்பதிவு:
நாளை மறுதினம் (24/11/2020) அன்று நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானிலை மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
Youtube => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள பரமக்குடி பகுதியில் அதிகபட்சமாக 5 செ.மீ, கமுதி, தக்கலை மணியாச்சி, குலசேகரப்பட்டினம் ஆகிய பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாங்குநேரி மற்றும் சிவகிரியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்களுக்கு நான்கு நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 21, 22 தேதிகளில் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- நவம்பர் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடற்பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நவம்பர் 25 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்க கடற்பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் தென் ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று 45 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும்.
இதன் காரணமாக மீனவர்கள் அனைவரும் இந்த நாட்களில் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.