தேசிய செய்திகள்:
- உத்தரபிரதேச மாநிலத்தில் ஹத்ராஸ் பகுதியை சேர்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி மரணம் அடைந்த வழக்கை ஓய்வு பெற்ற நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை அடுத்து இன்று உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வு விசாரணை நடத்தியது.
- மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அமல்படுத்திய வேளாண் சட்டத்தால் நாட்டில் உள்ள விவசாயிகள் தங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விற்பனை மற்றும் விலை நிர்ணயம் குறித்து அவர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மாநில செய்திகள்:
- நாடு முழுவதும் அக்டோபர் 15ம் தேதி முதல் தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போதைக்கு வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார்.
- திண்டுக்கல் அருகே சவரத் தொழிலாளியின் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்.8ம் தேதி சலூன் கடைகள் அடைப்பு போராட்டம் நடைபெறும் என சவரத் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சரவத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் ராஜா அவர்கள் வெளியிட்டு உள்ளார்.
கொரோனா அப்டேட்:
- 5 ஆம் கட்ட தளர்வு எதிரொலியாக தற்போது கொரோனா பரவல் அதிதீவிரமாக பரவி உள்ளது என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த பரவலுக்கு Super Spreading Event தான் காரணம் என்று கூறுகின்றனர் மருத்துவர்கள்.
- உலக மக்கள் தொகை கணக்கில் 10 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. உலக மக்கள் தொகையில் 76 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி செய்திகள்:
- தமிழகத்தில் கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு பற்றி இன்று கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுத் தேர்வினை ஒத்திவைப்பது பற்றிய விவாதங்கள் நடைபெற்றது.
- நாடு முழுவதும் அக்.15ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேட்டி அளித்துள்ளார்.
வர்த்தக செய்திகள்:
- ஒருவரின் ஆதார் எண்களை வைத்து அவரது வங்கிக் கணக்கை எவ்வித முறையிலும் ஹேக் செய்ய முடியாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. இது தொடர்பான மக்களின் குழப்பத்தை நீக்க, ஆதார் சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஒருவரது ஆதார் எண் அல்லது அதன் தகவல்களைப் பெறுவதன் மூலம், யாரும் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியாது.
- இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து ரூ.38,760 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,845 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கம் ஒரு கிராம் ரூ.5,086 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சவரன் ரூ.40,688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வானிலை செய்திகள்:
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. வரும் அக்டோபர் 9 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று அந்தமான் கடலில் உருவாகும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.
நீதிமன்றம் லேட்டஸ்ட்:
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய Police SI தேர்வில் முறைகேடு இருந்ததை அடுத்து தேர்விற்கான இறுதி பட்டியலை தேர்வாணையம் வெளியிடவோ அல்லது பணி நியமனம் செய்யவோ கூடாது என்று ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- மருத்துவம் படிக்கும் மாணவ மாணவியர் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் 2 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனை செல்லும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்பளித்துள்ளனர்.
பிற செய்திகள்:
- அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆர்.கே 2 என்ற சிறுகோள் வேகமாக பூமியை நோக்கி வருவதாக தெரிவித்துள்ளது. இது அக்டோபரில் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும். இந்த சிறுகோளால் பூமிக்கு எவ்வித தீங்குகளும் இருக்காது என்று நாசா கூறியுள்ளது, இருப்பினும் விஞ்ஞானிகள் அதன் நகர்வு குறித்து உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
- ஆப்கானிஸ்தான் அணியின் பிரபல பேட்ஸ்மேன் நஜீப் தாராகாய் மீது கடந்த வாரம் கிழக்கு நங்கர்ஹாரில் சாலையைக் கடக்கும்போது ஜீப் ஒன்று வேகமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.