அசைவ உணவுகளில் மட்டனில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. கர்ப்பப்பை பிரச்சனை உள்ளவர்கள் கூட இந்த மட்டனை சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை பெறலாம். இப்பொழுது இந்த மட்டனை வைத்து பஞ்சாபி ஸ்டைலில் மட்டன் மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் – 1/2 கி
- பெரிய வெங்காயம் – 1/4 கி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1 தேக்கரண்டி
- சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
- மல்லி – 1தேக்கரண்டி
- பட்டை
- கிராம்பு
- பிரியாணி இலை
- வரமிளகாய்- 5
- மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
- தக்காளி – 2
- நெய்
- இஞ்சிபூண்டு விழுது
- பச்சைமிளகாய் – 3
- தயிர் – ஒரு கப்
செய்முறை
முதலில் மட்டனை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு அதில் இஞ்சிபூண்டு விழுது, தயிர் மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து கலந்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும்.
இப்பொழுது ஒரு அகலமான கடாயில் நெய் ஊற்றி அதில் பட்டை கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கி அதன் பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும். நன்கு வதங்கியதும் அடுப்பை அணைக்கவும். இப்பொழுது தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் வறுத்து வைத்து வெங்காயம் போன்றவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது குக்கரில் நெய் ஊற்றி மிளகு, வர மிளகாய், பிரியாணி இலை போன்றவற்றை சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதில் சேர்த்து வதக்கவும். இப்பொழுது அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, மல்லித்தூள் போன்றவற்றை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். 5 நிமிடங்களுக்கு பிறகு மட்டனை அதில் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வைக்கவும். 30 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான பஞ்சாபி ‘மட்டன் மசாலா’ தயார்.