அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆக இருந்த நடிகை குஷ்பூ, இன்று டெல்லியில் பாஜக., தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி அவர்களை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். மேலும் பிரதமர் மோடி அவர்கள், நாட்டை சரியான பாதைக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்தார்.
கட்சி மாற்றம்:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் வலுவாக காலூன்றும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளது. இதனால் பிரபலங்களை கட்சியில் இணைக்க முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்த நடிகை குஷ்பூவை தற்போது பாஜக தன் வசம் இழுத்துள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித்தொடர்பாளர் ஆக இருந்த நடிகை குஷ்பூவை, முக்கிய நிகழ்வுகளில் புறக்கணிப்பதால் அவர் நீண்ட நாட்களாக அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக.,வில் சேர முடிவெடுத்த குஷ்பூ, நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று பிற்பகல் டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய பொதுச்செயலாளர் சிடி ரவி அவர்களின் முன்னிலையில் குஷ்பூ பாஜகவில் இணைந்தார்.
இந்நிகழ்ச்சியில், பாஜக தமிழக தலைவர் எல் முருகன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பூ, பிரதமர் மோடி அவர்கள் நாட்டை சரியான பாதைக்கு எடுத்துச் செல்வதாக பெருமையாக கூறினார். நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டு தான் பாஜக.,வில் இணைத்துள்ளேன். நான் காங்கிரஸில் இருந்த போதே பாஜக ஆதரித்து தான் பேசி உள்ளேன். தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற பாடுபடுவேன் என தெரிவித்தார்.