தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் அடுத்த 24 மணிநேரத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதுவை, காரைக்கால் பகுதியின் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
அடுத்த 48 மணிநேரத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.
நாளை (அக்.9) அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதாகவும், அதற்கடுத்த 24 மணிநேரத்தில் அது அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் அதிகம் கடன் பெற்ற மாநிலம் – தமிழகம் முதலிடம்!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என கூறப்பட்டு உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும், அப்பகுதியில் இருக்கும் மீனவர்கள் இன்று இரவுக்குள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.