தற்போது உள்ள இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு என்றால் அது பிரியாணி தான். ஒரு ஹோட்டலுக்கு சென்றாலே நாம் முதலில் ஆர்டர் செய்வது பிரியாணி தான். எளிய வகையில் சுவையான பிரியாணி எப்படி செய்வது என பாப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
சிக்கன் 1 கி, அரிசி 1/2 கி, இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி, மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி, மிளகாய்த்தூள் 2 தேக்கரண்டி,கரம் மசாலா, பெரிய வெங்காயம் 4, தக்காளி 4, பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, தயிர், கொத்தமல்லி, புதினா.
செய்முறை
முதலில் சிக்கனை நன்கு கழுவி அதில் தயிர் மஞ்சள்தூள், எலுமிச்சை பழம், சேர்த்து ஊறவைத்து கொள்ளவும். அதன்பின் அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும். பிறகு அகன்ற பாத்திரத்தில் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து வதங்கியதும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு அதில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். அதன்பின் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும்.
அதன்பின் சிக்கனை அதில் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லி, புதினா சேர்த்து 1 டம்ளர் அரிசிக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். ஊற்றி உப்பு சேர்த்து கிளறி விடவும். பிறகு கொதிவந்ததும் அரிசி சேர்த்து மூடிவைக்கவும். அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும். அரிசி முக்கால்பதம் வெந்தவுடன் மற்றொரு அடுப்பில் தோசைக்கல்லை நன்கு சூடுபடுத்தி அதன்மேல் இந்த பிரியாணி செய்த பாத்திரத்தை வைத்து அதன் மேல் தண்ணீர் பாத்திரத்தை வைக்க வேண்டும். 15 நிமிடம் கழித்து இறக்கினால் சூடான தம் பிரியாணி தயார்.