குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் சிக்கனும் ஒன்று. இதில் கடைகளில் கிடைக்கும் கேஎப்சி பாப்கார்ன் சிக்கனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிய முறையில் செய்யலாம். வாங்க எப்படி செய்றதுன்னு பாப்போம்.
தேவையான பொருட்கள்
சிக்கன், இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம்,தயிர், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, மல்லித்தூள், முட்டை, சோளமாவு, மைதா மாவு, உப்பு தேவையான அளவு.
செய்முறை
முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி,பூண்டு, பெரிய வெங்காயம் சிறிய துண்டு சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளவும். அதன் பின் ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் 2 முட்டையை சேர்த்து கலந்துகொள்ளவும். அதில் அரைத்து வைத்த விழுதை சாறு எடுத்து அந்த கலவையில் சேர்த்து மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும்.
அதன்பின் அந்த கலவையில் சிக்கனை சேர்த்து 1 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மஞ்சள்தூள், மல்லிதூள், மிளகு தூள், கரம் மசாலா சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கலந்துகொள்ளவும். இப்பொழுது நாம் ஊறவைத்துள்ள சிக்கனை இந்த மாவு கலவையில் பிரட்டி எடுக்கவும்.
அதன் பின் சிக்கனை ஊறவைத்த கலவையில் சிக்கனை தோய்த்து மறுபடியும் மாவு கலவையில் பிரட்டி எடுக்கவும். இப்பொழுது வாணலியில் எண்ணையை சூடாக்கி சிக்கனை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பாப்கார்ன் சிக்கன் தயார்.