பெரும்பாலும் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் அசைவ உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர். ஆனால் அசைவ உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பல உபாதைகளை ஏற்படுத்தி விடும். மேலும் சைவ உணவுகளையே அசைவ உணவுகள் அளவிற்கு சமைத்து கொடுத்தால் யாரெனினும் விரும்பி சாப்பிடுவர், அந்த வகையில் தற்போது காரைக்குடி ஸ்பெஷலான சைவ ‘கோழிக்குருமா’ எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெங்காயம் – 2
- பச்சைமிளகாய் – 4
- ஏலக்காய் – 2
- கிராம்பு – 2
- பட்டை – 2
- வரமிளகாய் – 3
- மிளகாய்த்தூள் -1 தேக்கரண்டி
- மல்லித்தூள் -1 தேக்கரண்டி
- மிளகு – 1 தேக்கரண்டி
- சீரகம் -1 தேக்கரண்டி
- சோம்பு -1 தேக்கரண்டி
- தேங்காய்ப்பால்
- காளான்
- இஞ்சி – சிறிது
- பூண்டு – 5 பல்
- நெய் – 5 தேக்கரண்டி
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கிராம்பு, பட்டை, சீரகம், தக்காளி, மிளகு, சோம்பு, ஏலக்காய், வெங்காயம், மிளகாய்த்தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்து விழுதாக்கி கொள்ளவும். பின்பு ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பெரிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் நறுக்கிய காளானை அதில் சேர்த்து வதக்கவும். பிறகு சிறிதாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை அதில் சேர்க்கவும். இப்பொழுது அரை கப் தயிரை அதில் சேர்க்கவும். நன்கு கொதித்ததும் அதில் உப்பு சேர்த்து கிளறவும். 5 நிமிடங்களுக்கு பிறகு அதில் தேங்காய்ப்பாலை சேர்த்து கொதிக்க விடவும்.
10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான காரைக்குடி ஸ்பெஷல் சைவ கோழிகுருமா தயார். இது இட்லி, தோசை மற்றும் அனைத்து சாதத்திற்கும் அருமையாக இருக்கும். நீங்களும் மிஸ் பண்ணாம செஞ்சு பாருங்க.