இந்தியாவில் ‘பப்ஜி’ (PUBG) ஆன்லைன் விளையாட்டை தடை செய்துள்ள மத்திய அரசின் நடவடிக்கைக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்து உள்ளார். இதனால் மாணவர்களின் நலன் காக்கப்படும் என அவர் பதிவிட்டு உள்ளார்.
‘பப்ஜி’ க்கு தடை:
இந்திய இளைஞர்களால் அதிகளவில் விளையாடப்படும் ஆன்லைன் மொபைல் கேம்களின் பட்டியலில் பப்ஜிக்கு தனி இடம் உண்டு. சீன நிறுவனமான டென்சென்ட் இதனை தயாரித்து இருந்தது. லடாக் எல்லை மோதலில் இருந்தே இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் இந்திய அரசு, சீன முதலீடுகள் மற்றும் தயாரிப்புகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதில் ஒரு நடவடிக்கையாக இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வழங்கும் வகையில் செயலபட்ட 100க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு தடை விதித்தது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் நேற்று மேலும் 118 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதில் பப்ஜியும் ஒன்று. மத்திய அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த விளையாட்டினால் பல தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. மத்திய அரசின் செயல்பாடு குறித்து பாமக தலைவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
அதில் “இந்தியாவில் பப்ஜி (PUBG) எனப்படும் இணைய விளையாட்டு செயலி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது. கல்வியை சிதைத்து வன்முறையை வளர்க்கும் இந்த செயலி தடை செய்யப்பட்டிருப்பதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தத்திலிருந்து மீட்கப் படுவார்கள்”.
பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் கணக்கு முடக்கம் – ஹேக்கர்கள் கைவரிசை!!
மேலும் ஒரு ட்வீட்டில், “பப்ஜி இணைய விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் 10-ஆம் தேதியே நான் வலியுறுத்தியிருந்தேன். பா.ம.க.வின் கோரிக்கை தாமதமாக, வேறு காரணங்களுக்காக ஏற்கப்பட்டிருந்தாலும், இதனால் மாணவர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்பதில் மகிழ்ச்சி” என பதிவிட்டு உள்ளார்.