இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. நாள் தோறும் பாதிப்புகள் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் மட்டும் 28,978 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 232 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் மருத்துவ பணி செய்ய மத்திய அரசு அனுமதி:
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் போதிய இடமின்றியும், அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு இல்லாமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மருத்துவத்துறை திண்டாடி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் இன்னும் இரண்டு வாரங்களில் உச்சம் தொடும் என்று அமெரிக்காவின் சுகாதார மதிப்பீடு ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறுபுறம் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இருக்கின்ற சுகாதார பணியாளர்களும் ஓய்வின்றி உழைப்பதாலும், அவர்களும் தொற்றுக்கு ஆளாவதாலும் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகி வருகின்றனர். இதன் காரணமாக மருத்துவ தகுதி கொண்ட அரசு ஊழியர்கள் மருத்துவ பணி செய்யலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது.
இந்த மருத்துவ பணி அல்லது மருத்துவ ஆலோசனைகளை தங்கள் பணிகளுக்கு இடையூறு ஏற்படாமல் ஓய்வு நேரங்களில் மட்டுமே செய்ய வேண்டும், அதுவும் முற்றிலும் தொண்டு அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பணியாளர் நலத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.