தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் வெளியில் சென்று வர கடும் சிரமங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக வெளியிடங்களில் சென்று வரும் பொதுமக்கள் கையில் தண்ணீர் பாட்டிலுடன் இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து கோடை வெப்பத்தை எதிர்கொள்வதற்கான சிறப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.