அண்ணா பல்கலைகழகம் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கடலூரைச் சேர்ந்த தற்காலிக ஆசிரியர் அருட்பெருஞ்சோதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் விபரம் பின்வருமாறு:
அண்ணா பல்கலையின் கூடுதல் பதிவாளர் டிச. 19 2019 அன்று விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில் அண்ணா பல்கலையில் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது அண்ணா பல்கலையின் உறுப்பு கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களாக 518 பேர் பணியாற்றி வருகின்றனர். தற்காலிக ஆசிரியர்கள் தொடர்பான வரன்முறை 10 ஆண்டுகளாக சரி செய்ய படாமல் உள்ளது. ஏற்கனவே கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசியர்களின் எண்ணிக்கை இதுவரை அண்ணா பல்கலை கண்டறியவில்லை.
இக்கட்டத்தில் ஆசிரியர் பணிக்கு எத்தனை பேர் தேவை என்பதை கண்டறியாமல் மணிக் கணக்கு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கு ஏற்கனவே நீதிமன்றங்கள் அவ்வப்போது கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் இது பல்கலை மானிய குழு மற்றும் தொழில்நுட்ப குழு விதிகளுக்கு எதிரானது. எனவே இந்த ஆசிரியர் நியமன விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வி. பார்த்திபன் அவர்கள் அண்ணா பல்கலை வெளியிட்ட இவ்விளம்பரத்திற்கு இடைக்கால தடை விதித்தார்.