யுஜிசி வழிகாட்டுதல்களின் படி அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் இன்ஜினியரிங் இறுதிப்பருவ மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் 3,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதால் அதிர்ச்சியில் உள்ளனர். அதற்கான காரணம் குறித்து அண்ணா பல்கலை தற்போது விளக்கம் அளித்துள்ளது.
இறுதிப்பருவ முடிவுகள்:
தமிழக முதல்வர் உத்தரவின்படி, இறுதி செமஸ்டர் தவிர பிற மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரியர் தேர்வுகள் ரத்து குறித்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் அரியர் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்க சென்னை பல்கலை நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 24 முதல் 29ம் தேதி வரை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வுகள் நடத்தப்பட்டன.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இதில் முறையாக எழுதாமல், வீட்டில் படுத்துக் கொண்டும், கூட்டமாக அமர்ந்தும் எழுதிய மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்படும் என அண்ணா பல்கலை ஏற்கனவே எச்சரித்து இருந்தது. நேற்று இறுதிப்பருவ முடிவுகள் வெளியிடப்பட்டன. மொத்தம் 1.50 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் 3,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டு ‘WH 1’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது அதற்கான விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்ட மாணவர்கள் தேர்வெழுதிய வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது. ஆய்வுக்குழு அளிக்கும் முடிவுகள் அடிப்படையிலேயே மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டனரா என்பது உறுதி செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா ஊரடங்கால் பலர் வேலையிழந்து தவிக்கும் நிலையில், முடிவுகள் தாமதமடைவதால் தங்களுக்கு வேலை கிடைப்பது மிக கடினம் என மாணவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.