தேசிய செய்திகள்:
- இந்திய மக்களின் சராசரி ஆயுட்காலம் கடந்த 30 ஆண்டுகளில் சராசரியாக 10 ஆண்டுகள் அதிகரித்து உள்ளதாக லான்செட் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 1990ம் ஆண்டு 59.8 ஆக இருந்த சராசரி ஆயுட்காலம் 70.8 ஆண்டுகளாக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
- பயணிகள் ரயில்களுக்கான புதிய அட்டவணை ரயில்வேத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றது, இதில் 600 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
- நேற்று வெளியான நீட் தேர்வு முடிவுகளில் சில மாநிலங்களில் தேர்வினை எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்கள் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அதனை அடுத்து தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
- கொரோன பொது முடக்க காலத்தில் கிட்டத்தட்ட 25 லட்சம் வழக்குகள் காணொளி வாயிலாக விசாரிக்கப்பட்டது என்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்:
- சென்னையில் ஆபரணத் தங்கம் (22 காரட்) ஒரு சவரனுக்கு ரூ.1,464 குறைந்து ரூ.37,440க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 183 ரூபாய் குறைந்து ரூ.4,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாநில செய்திகள்:
- நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், அரசு நடத்திய பயிற்சி மையங்களில் பயின்ற 1,615 பேர் இம்முறை தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சாத்தான்குளம் காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்கால ஜாமின் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கூடுதலாக, காவலருக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது தந்தை உயிர் இழந்ததால் இந்த ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியைக் குறைக்கும் முயற்சியில், மத்திய அரசு இறங்கி உள்ளது. அதில் ஒன்றாக ஏர் கண்டிஷனர்கள் (ஏசி) இறக்குமதிக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- சர்வதேச பட்டினி பட்டியலில் இந்தியா அதிர்ச்சிகரமாக 94வது இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளை விட பின் தங்கி இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது.
- ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தான “ஸ்புட்னிக்-வி” தடுப்பு மருந்தினை இந்தியாவில் பரிசோதிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டாக்டர் ரெட்டி என்ற நிறுவனம் இதனை பரிசோதிக்க உள்ளது.
வானிலை அப்டேட்:
- தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்டோபர் 20 ஆம் தேதி கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.