தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள காரணத்தால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன. புதிய நிர்வாகிகள் தேர்வு, உறுப்பினர் சேர்க்கை என தமிழக அரசியல் களைகட்டி உள்ளது. இதற்கிடையில் ஆளும்கட்சி அதிமுக.,வில் முதல்வர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து இழுபறி நிகழ்ந்து வந்தது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இன்று முதல்வர் வேட்பாளர் ஆக எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
முதல்வர் வேட்பாளர்:
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதல்வர் ஆக பதவி வகித்து வருகிறார். அதிமுக.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆகவும், துணை முதல்வர் ஆகவும் பன்னீர் செல்வம் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்சியினர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் தனித்தனியே ஆதரவு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!
இதன் முடிவில் இன்று (அக்.7) அதிமுக முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நேற்று விடிய விடிய முதல்வர் வேட்பாளர் குறித்து ஆலோசனை நடைபெற்றது. அதிகாலை 3 மணிவரை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்ட முடிவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படுவதை ஒட்டி சென்னை ராயபேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள், நிர்வாகிகள் குவிந்துள்ளனர். அதிமுக.,வை வழிநடத்துதல் குழுவில் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், காமராஜ், சி வி சண்முகம் ஆகிய அமைச்சர்கள் இடம்பெற்று உள்ளனர்.
இறுதியில் அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தற்போதைய துணை முதல்வரும் ஆன ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அறிவித்துள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் இறங்கி உள்ளனர்.