தமிழகத்தில் தென்மேற்கு பருவநிலை மாற்றம் காரணமாக பரவலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தொடர் கனமழை:
கடந்த ஜூன் மாதத்தில் இருந்து தமிழகத்தில் பரவலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரம் வரை பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர், மதுரை, நாமக்கல், தேனீ, சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையை பொறுத்தவரையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று நிலை சாதகமாக இல்லாத காரணத்தால் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை சென்னையில் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியசும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும் என்று கருதப்படுகிறது.
குறைவான மழை பதிவு:
எப்போதும் இந்த காலகட்டத்தில் குறைந்தபட்சமாக கனமழை 288 மில்லிமீட்டர் வரை பெய்யவேண்டும். ஆனால், இந்த ஆண்டு தமிழகத்தில் 261 மில்லிமீட்டர் தான் மழை பதிவாகி உள்ளது. 12 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இது வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றமாக கூட இருக்கலாம் என்று கருதப்படுகிறது.