தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிப்படங்களில் வில்லனாக நடித்தவர் ஜெயபிரகாஷ் ரெட்டி. நூற்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்த ஜெயபிரகாஷ் 74 வயது ஆன நிலையில் இன்று அதிகாலையில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இதற்கு திரைத்துறையினர் பலர் தனது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
ஜெயபிரகாஷ் ரெட்டி
ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்திலுள்ள சீர்வேல் என்ற ஊரை சேர்ந்தவர் ஜெயப்ரகாஷ் ரெட்டி. இவர் ஆசிரியராக இருந்து நடிப்பு ஆசையால் சினிமாவில் நுழைந்தார். தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் உருவான பிரம்மபுத்ருடு படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் சமரசிம்மா ரெட்டி படமே அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது.
அப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமானார். அதற்கடுத்து முன்னணி ஹீரோக்களுடனும் இவர் இணைந்து நடித்தார். அஜித் நடித்த ஆஞ்சநேயா படத்தின் மூலம் தமிழில் வில்லனாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஆறு, சின்னா, தருமபுரி மற்றும் உத்தமபுத்திரன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் கொரோனா லாக்டவுன் காரணமாக தனது சொந்த ஊருக்கு சென்று வசித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்று அதிகாலையில் உயிர் துறந்தார். இவரின் இந்த திடீர் மரணத்தால் திரையுலகமே அதிர்ச்சியடைந்துள்ளது. மேலும் ரசிகர்கள், திரைத்துறையினர் பலர் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.