தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளுக்கு உட்பட்டு கோவில் திருவிழாக்களை நடத்த இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
கோவில் திருவிழாக்கள்:
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்குநாள் தீவிரமடைந்து கொண்டே செல்கிறது. பிற மாவட்டங்களைப் போல் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. மாறாக சிறிய வருமானம் உள்ள கோவில்களை மட்டுமே திறக்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும் வருடாவருடம் நடைபெறும் உலக பிரசித்திபெற்ற கோவில் திருவிழாக்களை இந்த முறை நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது. இதனால் மதுரை சித்திரை திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை நடத்திக் கொள்ளலாம் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்து உள்ளது. மிக குறைந்த அளவிலான கோவில் பணியாளர்களை பயன்படுத்தி, முகக்கவசம் மற்றும் ஒருவருக்கொருவர் இடையில் 6 அடி இடைவெளி உள்ளிட்ட விதிகளை பின்பற்றி திருவிழாக்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் கோவில் திருவிழாக்களில் உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேவையென்றால் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.