தமிழகத்தில் ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கிரேடு அடிப்படையில் ரிசல்ட் வழங்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
10ம் வகுப்பு ரிசல்ட்:
தமிழகத்தில் இரண்டு முறை தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு பின்பு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பிய காரணத்தால் நீதிமன்ற உத்தரவுகளையும் கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். அரசின் இந்த முடிவிற்கு கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பாராட்டு கிடைத்தது. தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகைப் பதிவேட்டை கொண்டு 20% மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் நிறைய மாணவர்கள் தோல்வி அடைந்து இருப்பதாலும், பல்வேறு பள்ளிகளில் அந்த தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் இல்லாத காரணத்தாலும் பல்வேறு சிக்கல்கள் எழுந்தது. இதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு முடிவுகளை வழங்கலாமா அல்லது கிரேடு முறையில் வழங்கலாமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.