பொங்கல் பரிசு விநியோகம் – தேதி அறிவிப்பு

0
பொங்கல் பரிசு விநியோகம்

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.  தற்போது தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவந்த நிலையில் மீண்டும் பொங்கல் பரிசு விநியோகம் துவங்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பானது,

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றதையடுத்து, தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை அமல் படுத்தியிருந்தது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலம் தமிழக அரசு வழங்கவிருந்த பொங்கல் பரிசு தேர்தல் விதிமுறை விலக்கிக் கொள்ளப்பட்ட பின் விநியோகிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. 

தற்போது ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்துவிட்டதையடுத்து, குறிப்பிட்ட 27 மாவட்டங்களில் வரும் ஜனவரி 9 ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை, ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசுப் பொருள்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், விடுபட்டுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13 ஆம் தேதி, பொங்கல் பரிசு வழங்கப்படும் எனவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொங்கல் பரிசு விபரம் மற்றும் செலவு:

பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஆயிரம் ரூபாய் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

இதற்காக 2 ஆயிரத்து 363 கோடி ரூபாயைத் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு முன்பே அரசு ஆணை ஒன்று வெளியாகியிருந்தது. இந்த திட்டத்தின்படி, இந்த ஆண்டு 2 கோடியே 5 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வசதிக்காக விடுமுறை தேதி மாற்றம்:

இந்நிலையில் பொங்கல் பரிசை ரேஷன் கடைகள் விநியோகிக்க ஏதுவாக, வழக்கமாக ரேஷன் கடைகளின் விடுமுறை வழங்கப்படும் மாதத்தின் 2வது வெள்ளிக் கிழமைக்குப் பதிலாக மாதத்தின் 3வது வெள்ளிக் கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த வெள்ளிக் கிழமைக்கு (ஜனவரி 10) பதிலாகப் பொங்கல் முடிந்தவுடன் ஜனவரி 16ஆம் தேதி விடப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here