தமிழகத்தில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரு விதமாக இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்து உள்ளார். இதனை அந்தந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள்:
தமிழகத்தில் செப்டம்பர் 15ம் தேதிக்குப் பிறகு இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என அமைச்சர் கேபி அன்பழகன் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும், மாணவர்கள் நேரில் வந்து எழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் குறித்து அமைச்சர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார்.
- இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன், ஆப்லைன் என இரு விதமாக நடைபெறும். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் தேர்வெழுதலாம்.
- பிற மாணவர்களுக்கு நேரில் (ஆப்லைன்) எழுத்துத் தேர்வாக நடைபெறும்.
- மாணவர்களுக்கு ஆன்லைன், ஆப்லைன் தேர்வுகள் குறித்து அந்தந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் முடிவு செய்து கொள்ளலாம்.
- கல்லூரிகளில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாம்களை தவிர்த்து பிற கட்டிடங்களில் தேர்வுகள் நடத்தப்படும்.
- மாணவர்களின் விபரங்கள், கட்டட வசதிகள், ஆன்லைன், ஆப்லைன் தேர்வுகள் குறித்து விபரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
- விரைவில் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்படும் என அமைச்சர் கேபி அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.