ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்களால் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ஆந்திர மாநில அமைச்சரவை ரம்மி, போக்கர் போன்றவற்றிற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இளைஞர்களை பாதுகாக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்கள் தடை:
இளைஞர்களை தவறான பாதையில் தள்ளும் ரம்மி, போக்கர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய ஆந்திர அரசு இன்று முடிவு செய்துள்ளது. முதல்வர் ஒய் எஸ் ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையில் கூடிய மாநில அமைச்சரவை ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் முடிவை எடுத்ததாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பெர்னி வெங்கடராமையா (நானி) தெரிவித்துள்ளார்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆந்திர அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்களை தவறாக வழிநடத்தி அவர்களின் வாழ்க்கையை சேதப்படுத்துகிறது. எனவே இளைஞர்களைப் பாதுகாக்க இதுபோன்ற அனைத்து ஆன்லைன் சூதாட்டங்களையும் தடை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று நானி கூறினார்.
அமைச்சரவை முடிவின்படி, ஆன்லைன் சூதாட்டத்தின் அமைப்பாளர்கள் குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர ஒரு வருடம் சிறையில் அடைக்கப்படுவார்கள். இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் பிடிபட்டவர்கள் ஆறு மாத சிறைத்தண்டனைக்கு ஆளாவார்கள் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.