ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபை ஜனவரி முதல் வாரம் தொடங்கி தொடர்ந்து 4 அல்லது 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் புதுப்புது சம்பவங்களும், அறிவிப்புகளும் மற்றும் அமைச்சர்களின் கலகலப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்றன.
இன்றும் சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முருகுமாறனின் கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் கீழ்கண்டவாறு பதில் அளித்தார்.
மீன் சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது
அனைவரும் மீன் சாப்பிட்டால் கண் நன்றாக தெரியும் எனவும் அமைச்சர் தனது 55வது வயதில் தான் கண்ணாடி அணிந்ததாகவும் கூறினார். மேலும் புற்றுநோய், ஹார்ட் அட்டாக், கண்பார்வை கோளாறு உள்ளிட்ட எந்த பாதிப்புகளும் வராது எனவும் அவர் கூறினார்.
மீன் வளர்ப்பு
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஒரு ஹெக்டேரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் 10 மாதத்தில் ஒரு லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டலாம் எனவும் தமிழகத்தில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 5 லட்சம் டன் மீன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவித்தார். மீன் வளர்ப்புக்கான மானியம் வழங்க அரசு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இளைஞர்களுக்கு அறிவுரை
மேலும் இளைஞர்கள் படித்து முடித்தவுடன் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோராக தங்களை மாற்ற பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.