ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்கள் ஆக நிலவி வரும் கடும் வெப்பத்தின் காரணமாகவும் அதனால் ஏற்பட்ட காட்டுத்தீயின் காரணமாகவும் அங்கு கடும் வறட்சி நிலவுகிறது. கட்டுக்கடங்காத காட்டுத்தீயினை அணைக்க அந்நாட்டின் தீயணைப்பு வீரர்களும், உள்ளூர் மக்களும் கடுமையாக போராடி வருகின்றனர்.
கோடிக்கணக்கான விலங்குகள் உயிரிழப்பு
ஆஸ்திரேலியாவின் வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக இதுவரை 48 கோடிக்கும் அதிகமான விலங்குகள் மற்றும் 40க்கும் அதிகமான மனிதர்களும் உயிர் இழந்துள்ளனர். மேலும் பல லட்சம் ஏக்கர் அளவுள்ள காட்டுப்பகுதியும் எரிந்து நாசமாகியுள்ளது. இது தொடர்பான விடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கவலையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கடும் நீர் பற்றாக்குறை
அந்நாட்டின் ஏபிஒய் பகுதியிலுள்ள மக்களுக்கு கடும் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதற்கு அப்பகுதியுள்ள ஒட்டகங்களும் சில விலங்குகளும் அதிக சூட்டினை தாங்க முடியாமல் அதிகளவு நீரை குடிப்பதே காரணமாகும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
சுட்டுக்கொல்ல உத்தரவு
இதனால் மக்களை நீர் பற்றாக்குறையில் இருந்து பாதுகாக்க அந்நாட்டு அரசு அப்பகுதியில் உள்ள பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது. ஹெலிகாப்டர்களில் இருந்து கொண்டு வீரர்களைக் கொண்டு இன்று முதல் 5 நாட்களுக்கு சுமார் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல அந்நாட்டு நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
வனவிலங்கு ஆர்வலர்கள் அதிர்ச்சி
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள வனத்தீயினால் ஏற்கனவே கோடிக்கணக்கான விலங்குகள் உயிர் இழந்துள்ள நிலையில் அந்நாடு மேலும் பத்தாயிரம் ஒட்டகங்களை சுட்டுக்கொல்ல முடிவு செய்துள்ளது உலக வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.