சொத்து குவிப்பு வழக்கில் கைதான சசிகலா நான்கு ஆண்டுகளுக்கு பின்பு தண்டனை காலம் முடித்து இன்று பெங்களூரு அக்ரஹார சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சசிகலா விடுதலை
பெங்களூரு அக்கரஹார சிறையிலிருந்த சசிகலா தனது நான்கு ஆண்டு கால தண்டனை காலம் முடித்து இன்று விடுதலையானார். கடந்த 20 ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலாவுக்கு தற்போது பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்கு பின்பு சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆஸ்கார் விருதிற்கான பரிந்துரையில் ‘சூரரைப் போற்று’ – இன்று திரையிடல்!!
தொடர்ந்து சசிகலாவின் விடுதலை குறித்து சந்தேகங்கள் எழுந்து வந்தன. மருத்துவமனையில் இருப்பதால் அவர் எப்போது விடுதலையாவார் என கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இது குறித்து கர்நாடக சிறைத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், சசிகலா நாளை விடுதலை செய்யப்படுவார் என்றும் மருத்துவமனையில் வைத்தே விடுதலை தொடர்பான ஆவணங்களில் அவரிடம் கையொப்பம் வாங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை மருத்துவமனையில் இருந்தபடியே சிறை தண்டனை முடித்து விடுதலையாகியுள்ளார் சசிகலா. காவல்துறை உதவியுடன் மருத்துவமனையில் இருக்கும் சசிகலாவிடம் விடுதலை தொடர்பான ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது. தொடர்ந்து விடுதலை ஆவணங்களின் ஒரு நகலை சசிகலாவிடம் ஒப்படைத்துள்ளனர் சிறைத்துறையினர். அனைவரின் சந்தேகங்களும் நீங்கும்படி இன்று காலை சசிகலா விடுதலையாகியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை முடித்தபின் பிப்ரவரி மாதத்தில் அவர் சென்னை திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.