சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய்பிரசாத் மீது இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர், காவல்துறை கூடுதல் ஆணையர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளார். அதில் தனது இசைக் குறிப்புகளை அனுமதியின்றி விற்றது உள்ளிட்ட பல்வேறு வித புகார்கள் கூறப்பட்டு உள்ளது.
இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ:
இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், பிரசாத் ஸ்டூடியோவிற்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் நடைபெற்று வருகிறது. இது பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் எஸ். பிரசாத் உயிரிழந்த பிறகு அவரது மகன் சாய்பிரசாத் பல்வேறு மாறுபாடுகளை செய்ததால் தொடங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா ஏற்கனவே சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போது புதிய புகார் மனு காவல்துறை கூடுதல் ஆணையரிடம் வழங்கப்பட்டு உள்ளது.
அதில் பிரசாத் ஸ்டூடியோவில் தனக்கென ஒரு அறையை 25 ஆண்டுகளாக ஒதுக்கி உள்ளனர். எஸ் பிரசாத் மறைவிற்குப் பிறகு அவரது மகனும் அந்த தனி அறையை இளையராஜா பயன்படுத்த அனுமதித்து இருந்தார். அதில் இருந்து தற்போது சாய் பிரசாத் தன்னை வெளியேற்ற முயற்சிப்பதாகவும், அங்கிருந்த விலை உயர்ந்த இசை கருவிகளை சேதப்படுத்திவிட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தான் எழுதி வைத்திருந்த இசைக் குறிப்புகளை பெரிய தொகைக்கு விற்று விட்டதாகவும், எனவே சாய்பிரசாத் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என இளையராஜா தரப்பில் கோரப்பட்டு உள்ளது.