உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்து வருகின்றனர். இதற்கு தடுப்பு மருந்து தயார் செய்ய பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தயாரித்து உள்ள தடுப்பு மருந்து நாளை (ஏப்ரல் 23) மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதனை செய்யப்பட உள்ளது.
கொரோனா தாக்கம்:
சீனாவில் வுஹான் நகரில் பரவத்தொடங்கி தற்போது உலகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரஸினால் 25 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 1.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இங்கிலாந்தின் சுகாதாரத் துறை செயலர் மட் ஹான்காக் தடுப்பு மருந்து குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
தடுப்பு மருந்து:
இது குறித்து பேசிய மட் ஹான்காக், கொரோனா வைரஸ் தாக்கத்தை நீண்ட காலம் கட்டுப்படுத்த அதற்கான தடுப்பு மருந்து மட்டுமே ஒரே வழியாகும். இந்த பணியில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது. இதற்கான பரிசோதனைக்கு இங்கிலாந்து அரசு அதிகப்படியான நிதியுதவி வழங்கி உள்ளது. ஆக்ஸ்போர்டு (20 மில்லியன் பவுண்டுகள்) மற்றும் இம்பீரியல் (22.5 மில்லியன் பவுண்டுகள்) பல்கலைக்கழகத்தில் நிதியுதவி அளிக்கப்பட்டு தடுப்பு மருந்து உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்து உள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு இது குறித்த ஆராய்ச்சியில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் நாளை (ஏப்ரல் 23) மனிதர்களுக்கு தடுப்பு மருந்து கொடுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா ஒரு சக்தி வாய்ந்த எதிரி, ஆனால் மனித அறிவின் சக்தி அதை விட வலுவானது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |