தேசிய செய்திகள்:
- 74 வயதான மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களுக்கு இந்த வார தொடக்கத்தில் டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் மறைந்தார். இதனை அவரது மகன் சிராக் பாஸ்வான் உறுதிப்படுத்தி உள்ளார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
- நாடு முழுவதும் அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ‘அன்லாக் 5.0’ விதிகளில் பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. அதன்படி வரும் அக்.15 முதல் பொழுதுபோக்கு பூங்காக்களை திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருந்த நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன. ஆனால், மாநில அரசு இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை.
- கொரோனா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் வாயிலாக தொடங்கி வைத்தார். அதில் உரையாற்றி மோடி, ‘நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தான் இந்த கொரோனா வைரஸை அழிக்க வேண்டும். மருத்துவர்கள் மற்றும் களப்பணியாளர்கள் சிறந்த சேவையை வழங்கியுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
- உச்ச நீதிமன்றத்தை பற்றியும், நீதிபதிகள் வழங்கும் தீர்ப்பு பற்றியும் கருத்துக்களை கூறி வரும் வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷன் மீண்டும் நீதிபதிகள் வழங்கிய தண்டனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதனால் அவர் மீது அனைவரும் அதிருப்தி அடைத்துள்ளனர்.
மாநில செய்திகள்:
- சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு அவர்களுடன் செல்ல அவரது மனைவி சௌந்தர்யாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக பெண்ணின் தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனுவில் இந்த உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
- தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த சத்துணவு பணியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பில் பல இடைத்தரகர்கள் நுழைந்து முறைகேடுகள் நடத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து இந்த தேர்வு தமிழக அரசால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இடைத்தரகர்களிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்தவர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.
வர்த்தக செய்திகள்:
- கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.5 சதவீதம் சரியும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்தா தாஸ் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளார். மேலும் ரெப்போ வட்டி விகிதமும் 4% ஆக நீடிக்கும் என கூறியுள்ளார்.
- இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 256 ரூபாய் உயர்ந்து ரூ.38,736 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் தங்கம் 42 ரூபாய் உயர்ந்து ரூ.4,842 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.64.30 என்ற விலை நிலவரத்தில் விற்கப்படுகிறது.
- இன்று தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 18வது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.84.14, டீசல் ஒரு லிட்டர் ரூ.75.95 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- இந்திய பங்குச்சந்தை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து ஏற்ற நிலையிலேயே உள்ளது. நேற்று சென்செக்ஸ் 40 ஆயிரம் புள்ளிகளுடன் இருந்தது. அதே போல் இன்றும் புள்ளிகளுடன் ஏற்ற நிலையில் உள்ளது.
வானிலை ரிப்போர்ட்:
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இன்று அந்தமான் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக செய்திகள்:
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசிற்காக ஐக்கிய நாடுகள் சபையின் “உலக உணவு திட்டம்” அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் ஏழை மக்களுக்காக 58 ஆண்டுகளுக்கு மேலாக உணவளித்து வரும் சேவைக்காக இந்த அமைப்பு இம்முறை தேர்வாகி உள்ளதாக நோபல் பரிசு தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
கல்விச் செய்திகள்:
- தொல்லியல் முதுகலை பட்டய படிப்பில் தமிழ் மொழியினை சேர்த்திட வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி வலியுறுத்தி வந்ததை அடுத்து தற்போது முதுகலை பட்டய படிப்பில் தமிழ் உட்பட 10 மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
- தமிழக அரசின் உத்தரவையடுத்து அரியர் மாணவர்களுக்கு கல்லூரிகள் சார்பில் மதிப்பெண் வழங்கப்பட்டு வந்த பணிகள், தற்போது அரசு அறிவித்த அரசாணை அகில இந்திய கவுன்சிலின் விதிகளுக்கு புறம்பானது என்று கூறப்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அரியர் மாணவர்கள் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர்.
- தமிழகத்தில் உள்ள 11, பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் அக்டோபர் 14 ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் தங்களது தேர்வு மையங்களில் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.