ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள, ‘டாஸ்மாக்’ கடைகளில், 2019 டிசம்பர், 31ல் மட்டும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. இது, 2018 டிசம்பர், 31ல், 130 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு மிக உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில், அரசு நிறுவனமான, ‘டாஸ்மாக்’ சில்லறை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்கிறது. இவற்றில், தினமும், 80 கோடி ரூபாய்; வார மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான மது வகைகள் விற்பனையாகின்றன.
இம்முறை தமிழகத்தில் பலரும், மது விருந்துடன் புத்தாண்டு பிறப்பை வரவேற்றனர். இதனால் டிச. 31ம் தேதி மதியம் முதல் இரவு, 10:00 மணி வரை, டாஸ்மாக் கடைகளில், கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ஒருவர் கூறியதாவது : புத்தாண்டு தினத்தன்று, கோவில்கள், விருந்தினர்களின் வீடுகளுக்கு செல்வர் என்பதால், ஜனவரி, 1ல், மது விற்பனை வழக்கமான அளவு தான் இருக்கும். ஆனால் மது பிரியர்கள், அதற்கு முந்தைய நாள், மது விருந்துடன் புத்தாண்டை வரவேற்பர் என்பதால், டிச. 31ல் தான், மது விற்பனை அதிகம் நடக்கும். அது தான், புத்தாண்டு மது விற்பனையாக கருதப்படுகிறது. இதையடுத்து, இந்த புத்தாண்டிற்கு மட்டும், 150 கோடி ரூபாய் மதிப்பிலான, பீர் மற்றும் மதுபான வகைகள் விற்பனையாகி உள்ளன. இது கடந்த ஆண்டை விட 20 கோடி அதிகம் ஆகும்.