பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதைப்பொருள் பயன்பாடு கண்டறியப்பட்டதால் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சுஷாந்தின் முன்னாள் காதலி நடிகை ரியா சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதைப்பொருள் பயன்படுத்திய பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
போதைப்பொருள் வழக்கு:
இந்திய திரையுலகில் போதைப்பொருட்கள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது தொடர்பான விசாரணையில் மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர். ஏற்கனவே கன்னட நடிகைகளான ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கும் போதைப்பொருள் ஒரு முக்கிய காரணம் என விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக நடிகை ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள ரியாவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதனால் செப்.22 வரை அவர் போலீசாரின் விசாரணை வளையத்தில் இருப்பார். இந்நிலையில் ரியாவிடம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு (என்சிபி) போலீசார் நடத்திய விசாரணையில், பல பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரபல நடிகைகள் சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பேஷன் டிசைனர் சிமோன் கம்பட்டா உட்பட 25 பாலிவுட் நட்சத்திரங்கள் மீது என்சிபி அதிகாரிகளின் பார்வை திரும்பியுள்ளது
ரகுல் ப்ரீத் சிங் தன்னுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டதாக ரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் விரைவில் அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட உள்ளதாக பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. ரகுல் ப்ரீத் சிங் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே போன்ற படங்களில் நடித்துள்ளார்.