தினமும் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்களுக்கு காலையில் ஒவ்வொரு வகையான உணவுகள் செய்ய வேண்டியிருக்கும். இட்லி தோசை, உப்புமா இந்த மாதிரியான உணவுகளை செய்வதை விட வித்தியாசமான உணவுகளை செய்து தருவதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது ரவையை வைத்து வித்தியாசமான முறையில் காலை உணவு எப்படி தயாரிப்பது என்று பாப்போம் வாங்க.
தேவையான பொருட்கள்
ரவை – 150 கிராம்
தயிர் – அரை கப்
உருளைக்கிழங்கு 2
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 2
தக்காளி – 2
இஞ்சிபூண்டு விழுது
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை
கொத்தமல்லி
உப்பு தேவையடன அளவு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
முதலில் ரவையில் தயிர் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைத்துக்கொள்ளவும். அதன்பின் அதனை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். மாவு பதத்திற்கு அரைக்கவும். கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கி வெங்காயம், பச்சைமிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாடை போகும்வரை வதக்கவும். அதன்பின் வேகவைத்து மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதில் சேர்த்து அடிபிடிக்காமல் கிளறவும். பின்பு கொத்தமல்லி தூவி இறக்கி ஆற விடவும். இப்பொழுது தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நாம் அரைத்து வைத்துள்ள ரவை கலவையை தோசையாக ஊற்றி திருப்பி போடவும்.
இப்பொழுது செய்து வைத்த மசாலாவை உருட்டி தோசையின் நடுவில் வைத்து சதுரமாகவோ அல்லது நீளவாக்கிலோ மடித்து எண்ணெய் ஊற்றி திருப்பி போடவும். இப்பொழுது சுவையான காலை உணவு தயார்.