இறுதியாண்டு தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேர்வுகள் ரத்து:
கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா என்ற நோய் பரவி மக்களை பெரிதும் அச்சத்திற்கு உள்ளாக்கியது. இந்த பரவலை தடுக்க மத்திய அரசு பொது முடக்கத்தை அறிவித்திருந்தது. இதனால் கல்வி துறையில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மாணவர்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாநிலங்களும் பள்ளிகளுக்கான பொது தேர்வுகளை ரத்து செய்தது.
அதே போல் கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. அந்த கோரிக்கையினை யூ.ஜி.சி முதலில் மறுத்தது பின், இறுதி ஆண்டு மாணவர்களின் தேர்வுகளை தவிர்த்து மற்ற அனைத்து மாணவர்களின் தேர்வுகளையும் ரத்து செய்தது.
முடிவினை எதிர்த்து மனு:
ஆனால், இந்த முடிவினை எதிர்த்து பல மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் யூ.ஜி.சி இறுதியாண்டு மாணவர்களின் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறி வந்தது.
இந்த வழக்கிற்கான தீர்ப்பு ஆகஸ்ட் 28 ஆம் தேதி அதாவது இன்று வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷன், சுபாஷ் ரெட்டி மற்றும் எம்.ஆர்.ஷா கொண்ட அமர்வு இறுதியாண்டு தேர்வுகள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் கூறியதாவது:
தீர்ப்பினை வழங்கிய நீதிபதிகள் கூறியதாவது “இந்த தேர்வுகள் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் நலன் தான் முக்கியம் ஆனால் அவர்களது எதிர்காலம் அதனை விட முக்கியம். தேர்வுகள் நடத்தப்படாமல் மாநில அரசுகள் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க கூடாது. யூ.ஜி.சி வழிகாட்டுதல்களை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளனர்.