தமிழகத்தில் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் நூலகங்களை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா முடக்கம்:
கடந்த சில நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த கொரோனா பாதிப்பின் காரணமாக அரசால் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால், திரையரங்குகள், மால்கள், கோவில்கள், மசூதிகள் என்று அனைத்தும் மூடப்பட்டன. கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் தற்போது சில இடங்களுக்கு தமிழகத்தில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், சில நாட்களுக்கு முன் பொது நூலக இயக்குனர் அரசுக்கு நூலகங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை முன் வைத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று கொண்ட அரசு தற்போது பல வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளுடன் நூலகங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
நூலகங்களுக்கு அனுமதி:
தமிழகத்தில் மொத்தமாக உள்ள 4,638 நூலகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கன்னிமாரா, அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழு நேர கிளை நூலகம் என்று அனைத்து நூலகங்களையும் திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. பகுதி நேர கிளை நூலகங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்:
அனுமதி குறித்து சில வழிமுறைகள் மற்றும் விதிமுறைகள் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவெனில்,
- 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 15 வயதிற்கு உட்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் நூலகத்திற்கு செல்ல அனுமதி கிடையாது.
- நூலகங்கள் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தான் செயல்படவேண்டும்.
- நூலகங்களில் வேலைபார்ப்பவர்கள் மட்டும் தான் வாசகர்களுக்கு புத்தகங்களை எடுத்து கொடுக்க வேண்டும்.
- நூலகங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் கண்டிப்பாக முகக்கவசம், கையுறைகள் அணிந்திருக்க வேண்டும். நூலகங்களுக்கு வருபவர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
- சானிடைசர் கண்டிப்பாக உபயோகிக்க வேண்டும்.
- நூலகங்களில் பத்திரிகை பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
இது போன்ற விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.