அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பொதுமக்கள் அவசரகால பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில் இந்தியாவில் வரும் ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் முன்களப் பணியாளர்களுக்கு இதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
நாடு முழுவதும் இதுவரை 1 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 1,45,843 பேர் உயிரிழந்து உள்ளனர். உலகின் பிற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிக குறைவாக உள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தவர்கள் சதவீதம் 94% ஆக உள்ளது. முன்களப் பணியாளர்களின் அயராத உழைப்பின் காரணமாக பாதிப்பு பெருமளவு தடுக்கப்பட்டு உள்ளது. எனவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் இந்தியாவில் ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் பொழுது, முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள், காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட 30 கோடி பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என தெரிவித்த அமைச்சர், தடுப்பூசியின் வீரியம் குறித்து தொடர்ந்து ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு விண்ணப்பித்த நிறுவனங்கள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆராய்ச்சியில் எவ்வித குறைபாடுகளும் இன்றி சோதனை செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.