கோவை சுல்தான் பேட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் அப்பள்ளியை சுத்தப்படுத்த இன்று பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அரசுபள்ளியில் கொரோனா தொற்று:
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் பரவல் குறைந்துவந்ததால் இந்த மாத தொடக்கம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது பெருந்தொற்றின் பரவல் சற்று உயர்ந்துவரும் நிலையில் தமிழ்நாட்டில் தொற்று பரவலில் கோவை மாவட்டமானது முதலிடம் வகித்து வருகிறது.
இதனால் அம்மாவட்ட சுகாதார துறையினர் பள்ளிகளில் கொரோனா தொற்றிற்கான சோதனையை மேற்கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை அன்று கோவை மாவட்டத்தில் உள்ள சுல்தான்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் பரிசோதனையானது செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் 9 ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் 33 பேருக்கு இந்த பரிசோதனையானது நடத்தப்பட்டது.
நேற்று இதற்கான முடிவு வெளியானது. அதில் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு தொற்றானது உறுதியாகியுள்ளது. உடனடியாக சுகாதாரத்துறையினர் அந்த தகவலை நேற்று மாணவர்களின் பெற்றோருக்கு கொடுத்தனர். தற்போது அந்த 3 மாணவர்களுக்கும் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த 3 மாணவர்களின் தொடர்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
இந்த மாணவர்களில் 2 பேர்களின் பெற்றோர் கொரோனா தடுப்பூசியின் 2 தவணையும் செலுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று அந்த பள்ளிக்கு விடுமுறை அளித்து கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவுள்ளது.மேலும் சுகாதார துறையானது பள்ளிக்கு 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது.