சென்னையில் உள்ள கோவில்களில் ஆன்லைன் வாயிலாக தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய ஆதார் அட்டை விபரங்களை உள்ளிட வேண்டியது கட்டாயமான ஒன்று என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. இதனால் சாமி தரிசனத்திற்கு கூட ஆதார் அவசியமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கோவில்கள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் கோவில்கள் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் அனைத்து கோவில்களையும் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. நீண்ட நாட்கள் கழித்து கோவில்கள் திறக்கப்படுவதால் பக்தர்கள் அதிகளவில் வருவதை தவிர்க்க ஆன்லைன் முன்பதிவு பல கோவில்களில் தொடங்கப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா தொற்று அதிகமுள்ள சென்னை மாநகராட்சியில் உள்ள வடபழனி முருகன் கோவில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் உட்பட பல கோவில்களில் ஆன்லைன் முன்பதிவு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்ய ஆதார் அட்டை கட்டாயமாகும். மேலும் எஸ்எம்எஸ் வாயிலாக தரிசன நேரம், நாள் குறித்த விபரங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. கோவில்களில் நேரடியாக வழங்கப்படும் டோக்கன்களை பயன்படுத்தியும் சாமி தரிசனம் செய்யலாம்.
மேலும் குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களுக்கு சாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெண் பக்தர்கள் புடவை, சுடிதார், பாவாடை-தாவணி போன்ற பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிந்து வர வேண்டும் எனவும், ஆண்கள் சட்டை, குர்தா, வேட்டி, பேண்ட் போன்ற உடைகளை அணிந்து வரவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இந்த விபரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.