பஞ்சாப்பில் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கில், சோதனை செய்து கொள்பவர்களுக்கு இலவச உணவு வழங்கவும் திட்டத்தை முதல்வர் அமரீந்தர் சிங் தொடக்கி வைத்துள்ளார். இதனால் தொற்றுநோய் பரவுதல் மற்றும் அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றிற்கு உதவும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா பரிசோதனை:
பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை 63,473 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், 1862 பேர் உயிரிழந்து உள்ளனர். நாளுக்குநாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பரவல், உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பது தான். இதனை சரி செய்ய பஞ்சாப் அரசு புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
கொரோனா உறுதி செய்யப்பட்டு தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டால் வருவாய் இழப்பு, உணவு பற்றாக்குறை ஏற்படும் என பயந்தே பல ஏழைக் குடுமபங்கள் பரிசோதனை செய்யவில்லை. எனவே பரிசோதனை செய்யும் ஏழை குடும்பங்களுக்கு இலவச உணவு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான பாட்டியாலாவிலிருந்து இந்த திட்டம் தொடங்கப்படும் என முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
ஏழை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வீட்டு தனிமையில் இலவச உணவு போன்ற ஏற்பாடுகளைச் செய்யுமாறு முதலமைச்சர் பிற மாவட்ட அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். இதனால் கொரோனா பரிசோதனைக்கு பிறகு, தனிமைப்படுத்தலின் போது தங்கள் வருவாயை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் வாழ வேண்டாம் என்று அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதால் மக்களும் பயப்படுகிறார்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ள முதல்வர் அமரீந்தர் சிங், இந்த அச்சத்தை எதிர்த்துப் போராடுவதற்கு தனது அரசாங்கம் வீட்டு தனிமைப்படுத்தலை ஊக்குவிப்பதாகவும், நோயாளிகளின் வீடுகளுக்கு வெளியில் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களை அகற்ற முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதில் உள்ள சங்கடத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் கூறியுள்ளார்.