தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலை, கல்லூரிகளில் அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ள அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது.
தேர்வுகள் ரத்து:
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் அடுத்த கல்வியாண்டு தொடங்குவதில் தாமதம் மற்றும் மாணவர்களை நேரில் தேர்வெழுத வைப்பதில் பல்வேறு சிக்கல்கள் நிலவுவதால் 1 முதல் 10ம் வகுப்பு வரை பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல கல்லூரிகள் கொரோனா தனிமைப்படுத்துதல் முகாமாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால், செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு முந்தைய தேர்வுகள் மற்றும் உள்மதிப்பீடு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் என பல மாநிலங்கள் அடுத்தடுத்து அறிவித்தன. பல்கலைக்கழக தேர்வுகளை ரத்து செய்யும் உரிமம் மாநிலங்களுக்கு இல்லை என கூறிய யுஜிசி, இறுதிப்பருவ தேர்வுகளை நடத்த கட்டாயப்படுத்தியது. இதனால் செப்டம்பர் 30ம் தேதிக்குள் தேர்வுகளை நடத்தி முடிக்க மாநிலங்களை அறிவுறுத்தி உள்ளது. மேலும் முதல், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் விரும்பினால் தேர்வுகளை நடத்திக் கொள்ளவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கிடையில் தமிழகத்தில் அரியர் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து பணம் செலுத்திய மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்தார். இதனால் பல லட்சக்கணக்கான மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கு நன்றி தெரிவித்து முதல்வருக்கு விதவிதமாக போஸ்டர் அடித்து ஒட்டினர். இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதனை நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளது மாணவர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.