உத்திர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸிலிருந்து 19 வயது தலித் பெண் ஒருவர் கூட்டு பாலியல் ஆளாகி கொடூரமாக தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த பெண்ணின் உடலை குடும்பத்தினரிடம் கூட ஒப்படைக்காமல் காவல் துறையினரே தகனம் செய்ததும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மேலும் ஒரு 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து உள்ளார்.
உத்திர பிரதேசத்தில் கொடுமை:
மத்திய குற்றப்பிரிவு ஆணையம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு 87 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாட்டில் உத்திர பிரதேச மாநிலத்தில் தான் பெண்களுக்கு எதிரான அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன. இதனால் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசினை எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.
குற்றவாளிகள் அனைவரும் உடனடியாக தூக்கிலிடப்பட்ட வேண்டும் என பொதுமக்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இந்நிலையில் ஹத்ராஸில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் மற்றும் அரசாங்க பணி என முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரண உதவிகளை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது பெண் ஒருவர், செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பவில்லை என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் தேடி உள்ளனர். அவர் புதன்கிழமை ஒரு ஆட்டோவில் வீடு திரும்பியபோது, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, உடலில் காயங்களுடன் இருந்துள்ளார். அதன் பிறகு உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.
இதில் அப்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்ததாக குடும்பத்தினர் புகார் அளித்தனர். இந்த வழக்கில் ஒரு சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களில், உ.பி.யில் இரண்டு தலித் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.