நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க 8வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு (அன்லாக் 5.0) பல்வேறு கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள வழிகாட்டுதல்களின்படி கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் கூடுதல் செயல்பாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பி வருவதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் தடுப்பூசி கண்டறியப்படும் வரை முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்றவற்றை கடுமையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
புதிய தளர்வுகள்:
- அக்டோபர் 15ம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள் / மல்டிபிளெக்ஸ் 50% இருக்கை வசதியுடன் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் விரைவில் வெளியிடும்.
- விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கு பயன்படுத்தப்படும் நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
- பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை அக்டோபர் 15 க்குப் பிறகு திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இருப்பினும் ஆன்லைன் கல்வி முறையை ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- பெற்றோரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே மாணவர்கள் பள்ளிகள் / பயிற்சி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.
- சமூக / கல்வி / விளையாட்டு / பொழுதுபோக்கு / கலாச்சார / மத / அரசியல் செயல்பாடுகள் மற்றும் பிற கூட்டங்கள் அதிகபட்சம் 100 நபர்களுடன் நடைபெற அனுமதி.
- நபர்கள் மற்றும் பொருட்களின் மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்த தடையும் இருக்காது. இதற்கு எவ்வித இ-பாஸ் போன்ற அனுமதிகள் தேவையில்லை.
இந்த தளர்வுகள் அனைத்தும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மேலும் கட்டுப்பாட்டு பகுதிகளில் அக்டோபர் 31 வரை ஊரடங்கு கண்டிப்பாக பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.