தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், ‘நீட் என்ற மனுநீதி தேர்வை’ எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என அறிக்கை வெளியிட்ட நடிகர் சூர்யாவிற்கு ஆதரவாக #TNStandWithSuriya என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சூர்யாவிற்கு ஆதரவு:
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்று முடிந்தது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக தேர்வை ரத்து செய்யக்கோரி மாநில அரசுகளும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். அது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் நீட் கட்டாயம் நடைபெறும் என தெரிவித்தது. அதற்கு ஏற்றவாறு நேற்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மதியம் 2 மணி அளவில் நீட் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் தேர்விற்கு முந்தைய நாளில் தமிழகத்தில் மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இது மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், நீட் போன்ற மனுநீதி தேர்வு மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களை பறிக்கிறது. கொரோனா உயிர் பயத்தால் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமின்றி தேர்வெழுதுமாறு உத்தரவிடுகிறது. நமது பிள்ளைகளின் தகுதிகளையும், திறனையும் தேர்வுகள் நிர்ணயிக்க கூடாது. சாதாரண குடும்ப பிள்ளைகளின் மருத்துவர் கனவில் தீ வைக்கும் நீட் தேர்விற்கு எதிராக ஒரு சமூகமாக நாம் ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் என கூறியிருந்தார்.
We stand with @Suriya_offl.
More power to you.. #TNStandWithSuriya pic.twitter.com/p1z83NKqKH— Navas (@Navas2616) September 14, 2020
சூர்யாவின் கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய நீதிபதி சுப்ரமணியம், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். இந்நிலையில் நடிகர் சூர்யாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து அவரது ரசிகர்கள் உட்பட பலரும் #TNStandWithSuriya #நீட்என்றமனுநீதிதேர்வு என்ற ஹேஷ்டேக்களை ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர். நீட் தேர்விற்கு எதிராக குரல் குடுத்த முதல் நடிகர் இவர் தான். சூர்யாவின் அகரம் அறக்கட்டளை மூலம் பல ஏழை மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.