உலக கோப்பையின் தகுதி சுற்றில் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றியுடன் தொடரை தொடங்கி உள்ளது.
டி20 உலக கோப்பை 2022:
டி20 உலக கோப்பையின் தகுதி சுற்று போட்டிகள் 8 அணிகளுக்கு இடையே இரு குரூப்களின் கீழ் நடைபெற்று வருகிறது. இதில், குரூப் B யில் இடம்பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி அயர்லாந்து அணியை எதிர்த்து போட்டியிட்டது. இந்த போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து, களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் ரெஜிஸ் (0), கேப்டன் கிரேக் (9) என வந்த வேகத்தில் வெளியேறினர்.
இவர்களை தொடர்ந்து, வெஸ்லி (22), சீன் வில்லியம்ஸ் (12), மில்டன் (16), ரியான் (1) என அடுத்தடுத்து வெளியேற சிக்கந்தர் ராஜா மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். இதனால், 20 ஓவர் முடிவில், ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதில், சிக்கந்தர் ராஜா 48 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 82 ரன்களை அடித்திருத்தார். இதையடுத்து, 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து, ஆரம்ப முதலே தடுமாறி வந்தது.
இந்த தடுமாற்றத்தால், சீரான இடைவெளியில், அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க, 20 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில், அயர்லாந்தின் கர்டிஸ் 27 ரன்கள் எடுத்திருந்தார். ஜிம்பாப்வே சார்பாக பிளெஸ்ஸிங் 3, டெண்டை மற்றும் ரிச்சர்ட் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர். இந்த போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றதன் மூலம் குரூப் B யில் முன்னிலை பெற்றுள்ளது.